Sunday 28 February 2016

உடுக்குச் சத்தம்!





தீவின் காற்றிலே
சடை பின்னும் வயல்வெளியில்
வெய்யில் விழுந்து கால் அலம்பும்
வேலங்குளக் களிமண் எடுத்துக் கடவுள் செய்த
நினைவுகள் இன்னும்
குழையும் நிலையில் ஈரமாகத்தான் இருக்கின்றன.

ஐயனார் கோவில் முகப்பில்
பொந்து விழுந்த
விருட்சமாய் ஒரு அரசமரம்
இன்னும்  மனதில்
வேரூன்றி நிற்கிறது.

மண்ணில்
இப்போது இல்லை.

அந்த அரசமரப் பொந்து 
இல்லாதவனின் பக்திக்காய்
ஒரு வைரவ சூலத்திற்காய்
இயற்கை கட்டிய கோவில்போன்று அழகானது.

 
கந்தையா அண்ணனுடைய
நெற்றியில் வட்டப்பொட்டு,
உடுக்குச் சத்தம்,
வடைமாலை, தேசிக்காய்மாலை,
படையல், பூசை, பக்தி, கலையாட்டம்
பார்த்த கண்கள் இன்னும்
சூலத்தில் குத்தி நிற்கின்றன.

ஐயனார் கோவில் முகப்பில்
பொந்து விழுந்த
விருட்சமாய் ஒரு அரசமரம்
மனதில்
வேரூன்றி நிற்கிறது.

மண்ணில்
இப்போது இல்லை.

ஒரு
ஆதிப் படையல் மரம் வெட்டப்பட்டதும்
சைவ ஆதிக்க மரம் நடப்பட்டதும்
நிகழ்வானதால்
யாருக்கும் நிழல் இல்லை.          
                         -சிவம். 

Tuesday 23 February 2016

Thursday 11 February 2016

கடலும் நானும்.





நீர் கிழித்து உயரத்தெறிக்கும் துளிக்குள்
ஒரு முரலின் முன்முனையின் சேமிப்பு
என் உயிர்.

கரையறுத்து மணல் துருத்தி
நுரை செதுக்கும்
வெள்ளிக்கொலுசின் மணிக்குள்
துடிக்கும்
என் இதயம்.

பாறைகள் எனது நரம்புகள்.
சூறைகளும் சுனாமியும்
என் சுவாசம்.

பிள்ளைத்தாச்சி மீனைப் பிடித்தால்
திருப்பிக்கடலில் விட்ட அப்புமார்
கடல்நிலம் காலால் உரசிப்
பெருவிரல் கொண்டு அளந்தவர்கள்.


முகம்பார்க்கும் முழுநிலவே
கடல்வயிறே தீய்கிறது.
உன் முகத்தில்
கறையாய்த் தெரிகிறது.

கடலின்
அடிவயிற்றில் கொள்ளி சொருகும்
மனிதப் பதர்கள்
இருகரையும் அலறும் குழந்தைகளுக்கு
சாம்பலையா ஊட்டுவர்
வரும் நாளில்.

மீன்கள் இல்லாக் கடலிலே
படகு வாழ்தல் கூடுமோ?
பவளப் பாறை இல்லையே
நாளை
கடலும் மீனைத் தேடுமோ?
                                                               -சிவம்.