தொடரும்
இனி.
இமயத்துக் காற்றை
உள்ளங்கையில் ஊட்டிவிடும்
சீனத்து வித்தைகள் நம்தெருவில் நடக்கும்.
ஐங்கோணச் சுவருக்கள் இருந்தபடியே
மன்னார் வளைகுடாவில் மீன் பிடிப்பர்.
கருவாடாய் நமக்கே விற்பர்.
கறுப்புத் திரவத் தங்கம் அள்ளிமுடித்து
மலட்டுப் புழுதியில் விதைக்க
ஒருமுறை மட்டுமே முளைக்கும் விதைகள் தருவர்.
மறதி சேகரித்த தேனீகள்
கூடு திரும்பா.
மழைநீர் சேமிக்கும் மூளைகளை
உப்பில் மூடி
கடல் நீரிலிருந்து குடிநீர் தருவர்.
நோய்களில் மடித்துவைத்து
இலகுவான உணவு தருவர்.
மருந்துகள் உணவாகும்.
மரணம் உயிர்வாழும்.
அரை நூற்றாண்டுகளுக்குமுன் கண்டுபிடித்த கனிமங்களை
"உதவி" என்ற சொல்லைக் கூர்மைப்படுத்தி வறுகுவர்.
அபிவிருத்தி என்பர்.
யாருக்கு?
- சிவம்.
2011

No comments:
Post a Comment